உள்ளடக்கத்திற்குச் செல்க

தமிழீழ ஆவணக் காப்பகம்

கட்டுரைகளுக்குத் திரும்பு
Vishwamadu massacre 25.11.1998

Vishwamadu massacre 25.11.1998

10.06.1998 Swathipuram Massacre

4 ஜூலை, 2022
கட்டுரை #642

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள சுதந்திரபுரம் கிராமம், உடையார்கட்டுச் சந்தியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அண்ணளவாக இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் ஆகும். இக்கிராமத்தில் ஆரம்பகாலங்களில் குடித்தொகை குறைவாகக் காணப்பட்ட போதும் ஏனைய பிரதேசங்களிருந்து காலத்துக்குக் காலம்; இராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த மக்கள் 1996ஆம் ஆண்டினைத் தொடர்ந்து கூடுதலாக இப்பிரதேசத்தில் வசித்துவந்தனர்.

 

10.06.1998 அன்று காலை 9.15 மணி தொடக்கம் 11.30 மணிவரை ஆனையிறவு, அம்பகாமம் ஆகிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரும் விமானப் படையினரும் இணைந்து இப் பகுதியில் மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைத் தாக்குதலையும், விமானத் தாக்குதலையும் நடத்தினார்கள். மக்கள் எதிர்பார்த்திராத சந்தர்ப்பத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றதனால் மக்களால் பாதுகாப்புத் தேடிக்கொள்ள முடியவில்லை.

 

தாக்குதலுக்கு உட்பட்ட பகுதியானது புகைமண்டலமாக மாறியதுடன், எங்கும் ஒரே அழுகுரல்கள் கேட்டவண்ணமிருந்தன. இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே காணப்பட்டன. காயமடைந்தவர்களையும் விட்டுவிட்டு ஏனையவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றும் நோக்குடன் ஓடி ஒளித்துக்கொண்டார்கள். பின்னர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இங்குள்ள மக்கள் ஈடுபட்டனர். நடைபெற்ற தாக்குதலில் முப்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன், ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மக்களின் பல இலட்;சம் ரூபா பெறுமதியான சொத்துகள் அழிந்தன. பத்து வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன.

நூறு வீடுகள் சேதமடைந்தன. பயன்தரு தென்னை மரங்கள் அழிந்ததால் கிராமத்தின் அழகும், அமைப்பும் சீர்குலைந்து போயிற்று.