உள்ளடக்கத்திற்குச் செல்க

தமிழீழ ஆவணக் காப்பகம்

கட்டுரைகளுக்குத் திரும்பு
அன்பரசி படையணி

அன்பரசி படையணி

Anparasi Brigade

20 ஜூன், 2022
கட்டுரை #70

29.07.1995ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் 4 ஆம் முச்சந்தி சிறிலங்கா படை முகாம் தாக்குதலின்போது கப்டன் அன்பரசி வீரச்சாவடைந்தாள். அன்பரசி ஒரு சுறுசுறுப்பான விவேகமான போராளி. இவளது ஞாபகமாகவே மட்டு – அம்பாறை மகளிர் படையணிக்கு அன்பரசி படையணி என்று பெயர் சூட்டப்பட்டது.

லெப். கேணல் மதனாவினது சுறுசுறுப்பையும், துணிவையும், புத்துணர்வையும், களங்களில் படைநடத்தும் திறமையையும் கண்ணுற்ற மட்டு அம்பாறை மாவட்ட சிறப்புத்தளபதி  அவர்கள் படையணியின் முதல் சிறப்புத் தளபதியாக லெப். கேணல் மதனாவை அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதியாக நியமித்தார்.

 

வவுணதீவுத் தாக்குதலில் படையணியின் பல போராளிகளுடன் முதல் சிறப்புத்தளபதி லெப். கேணல் மதனா வீரச்சாவடைந்தார்.

 

இரண்டு பெரும் ஆட்லறிகள் கைப்பற்றிய புளுகுணாவில் வெற்றிச் சமரிலும் இப் படையணி பெரும் பங்காற்றியதுடன்; மட்டு – அம்பாறை மாவட்ட காடுகள், மலைகள், அருவிகள் மற்றும் வவுணதீவு, முறக்கொட்டான்சேனை, மாவடிவேம்பு எங்கும் எப்படையணியின் நீண்ட வரலாறுகள் விரிந்தன.

அதனுடன் ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் 02 மற்றும் ஓயாத அலைகள் 03 தொடர் நடவடிக்கையிலும் இப் படையணியின் வீர அத்தியாயம் பதியப்பட்டு அன்பரசி படையணியின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான்.