காந்தரூபன் அறிவுச்சோலை


  படியுங்கள்

1993 நவம்பர் 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட
போது அவர் ஆற்றிய உரையில் “எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள் .
எமது போராளிகள் அனைவருமே இவர்களின் சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணை பிரியாத அங்கமாக இணைந்துள்ளனர்.

தனிக்குடும்பம், அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டு வளரப்போகும் இவர்கள், எதிர்காலத்தில்
எமது தேசத்தின் சிற்பிகளாகத் திகழ்வார்கள் என்பது திண்ணம். இந்தச் சமூகச் சூழலில் இவர்களிடம் மண்பற்றும் மக்கள் பற்றும் ஆழமாக வேருன்றி வளரும்.
இத்தகைய நற்பண்புகளுடன் இவர்கள் கல்வியறிவுபெற்று இந்தத் தேசத்தின் நிர்மானிகளாகவும் உருப்பெற்று எமது மக்களுக்குப் பெரும் பணியாற்றுவார்கள். நாங்கள் ஒரு புறம் மண்மீட்புப் போரை நடத்துகின்றோம். மறுபுறம் குழந்தைகளுக்கான வேலைத்திட்டங்கள் போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபடுகின்றோம்.
 

ஆனால் இத்தகைய சேவைகள் வெற்றி பெற சமுதாயம் தனது ஆக்கபூர்வமான உதவிகளை மனப்பூர்வமாக வழங்கவேண்டும்” என்று கூறினார்.



பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த கந்தரூபன் என்ற இளைஞன் தானே விரும்பி தலைவரிடம் கேட்டு கரும்புலியாய் சென்று வீரச்சாவைக் தழுவிக்கொண்டார்.
இம் மாவீரன் தலைவர் பிரபாகரனிடம் ” யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப்புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து
ஆளாக்கியதைப்போல , தமிழீழத்தில் அநாதைகளாகாக வாழுமம் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்கவேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின் ஆசையை நிறைவேற்றும் முகமாக காந்த ரூபன் அறிவுச்சோலை எனப்பெயரிடப்பட்டது.