ஈழநாதம்


  படியுங்கள்

இறுதிவரை போராடி முள்ளிவாய்க்காலோடு முடங்கி போன ஈழநாதம்

ஈழநாதம் மக்கள் நாளிதழ் 1990 ஆம் ஆண்டு மாசி மாதம் 19 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஈழநாதம் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நாளாந்த பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளிவந்துகொண்டிருந்த இப்பத்திரிகை இலங்கையில் நடைபெறும் பெரும்பாலான முக்கிய செய்திகளை வெளியிட்டு வந்ததுடன் தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த துன்பங்களையும் உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய பத்திரிகைகளில் வடக்கின் முன்னணி நாளிதழாக இருந்தது.1995 ஆம் ஆண்டு சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் யுத்தத் தை அடுத்து யாழ்ப்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி கல்வயல் பகுதியில் இயங்கிவந்தது. பின்னர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்திருந்த ஈழநாதம் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்தது.

1996 ஆம் ஆண்டு கிளிநொச்சியை நோக்கிய சத்ஜெய இராணுவ நடவடிக்கையினால் ஈழநாதம் நிறுவனம் பழைய முறிகண்டிப்பகுதிக்கும் பின்னர் கரிப்பட்டமுறிப்புக்கும் பின்னர் புதுக்குடியிருப்புமாக மாறி மாறி இடம்பெயர்ந்திருந்தது.

வன்னியின் நெருக்கடியான காலக்கட்டமான 1996-2002 வரைக்கும் அதாவது பிரதான கண்டிவீதி திறக்கும் வரைக்கும் வன்னிக்கட்டுப்பாட்டுப்பகுதியில் வெளிவந்த ஒரே ஒரு மக்கள் ஊடகங்களில் ஈழநாதம் பத்திரிகையும் ஒன்றாகும்.

2002 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் கிளிநொச்சியில் இயங்கி வந்த இப்பத்திரிகை ஏனைய மாவட்டங்களிலும் வெளிவந்தது. அதாவது இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதியான யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களிலும் வெளிவந்திருந்தது.

இவ்வாறாக 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 11 ஆம் திகதிப்பின்னர் வன்னிப்பகுதியில் மட்டுமே வெளிவந்திருந்த இப்பத்திரிகை தொடர்ந்து தமிழ்மக்களின் நெருக்கடி நிலை வாய்ந்த சூழல்களை தாங்கி வெளிவந்திருந்தது.

இறுதி யுத்தத்தின் கோரப்பிடியில் வன்னியில் பெரும்பாலான நிலங்கள் ஆக்கிரமிப்பட்ட பின்னர் கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களையும் சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்திருந்த நிலையில் கிளிநொச்சி நகரையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் எறிகணை மற்றும் பலத்த விமானத்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கிளிநொச்சியில் இருந்து ஓக்டோபர் 2008 முற்பகுதியில் தருமபுரம் பகுதிக்கு இடம்பெயந்து தற்காலிகமாக இயங்கி வந்தது.

பின்னர் தருமபுரம் பகுதியில் இருந்து தை மாதம் உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்தது. பின்னர் சுதந்திரபுரம் பகுதியிலும் பெப்ரவரி 10 ஆம் திகதி தேவிபுரம் பகுதியில் இயங்கியது. தேவிபுரம் பகுதியில் ஒரே ஒரு நாள் மட்டுமே ஈழநாதம் பத்திரிகை வெளிவந்திருந்தது.

தேவிபுரம் பகுதியில் இருந்து அச்சுஇயந்திரங்கள் மற்றும் தளபாடங்கள் படையினரின் பலத்த எறிகணைத்தாக்குதலில் சேதமடைந்திருந்த நிலையில் மிக்குறைந்த பணியாளர்களின் ஒத்துழைப்போடு இரணைப்பாலைப்பகுதியில் இடம்பெயர்ந்து சென்றது. ஆனால் அங்கு பத்திரிகை அச்சிடுவதற்கான எந்தவித சாத்தியங்கள் இல்லாதஅளவுக்கு அச்சு இயந்திரங்கள் மோசமாக சேதமடைந்திருந்தது.

இந்நேரத்தில் ஈழநாதம் பத்திரிகை இயந்திரங்கள் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் இயந்திர இயக்குனர் சுகந்தன் என்பரின் முயற்சியினால் பிளேட் மேக்கர் என்ற இயந்திரம் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அச்சுஇயந்திரங்கள் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு நகரும் பத்திரிகை நிறுவனமாக செயற்பட்டிருந்தது. இலங்கையில் முதலாவது நகரும் பத்திரிகை நிறுவனம் ஒன்று சொன்னாலே மிகையாகாது. ஏறிகணைகள் மிக அருகில் விழுகின்ற சமயம் அதனை பிறிதொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டவர்கள் தான் அன்ரனி(அன்ரனிக்குமார்), தர்சன் ஆகியோர். இவர்கள் இருவரும் வாகனத்தினை பிறிதொரு இடங்களுக்கு நகர்த்துவதில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் இன்று உயிருடன் இல்லையென்பதற்காக மிகைப்படுத்தியதாக யாரும் எண்ணவேண்டாம். உண்மையில் இவர்களின் துணிச்சலான இப்பணியினை ஏனைய ஊடகவியளாலர்கள் கூட வியந்திருக்கின்றார்கள்.