யாழ் மந்துவில் படுகொலை – 06 மே 2006


யாழ். மந்துவில் கோலத்தம்மன் ஆலய கும்பாபிஷேக முன் ஏற்பாடுகளைச் செய்வதற்காக 06.05.2006 அன்று இரவு எட்டு இளைஞர்கள் ஆலயத்தில் தங்கியிருந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

அப்போது இரவு 7 மணியளவில் அப்பகுதிக்கு வந்த இலங்கை இராணுவத்தினர் அங்கிருந்தவர்களை விசாரித்துவிட்டுச்சென்றனர். பின்னர் இரவு 11 மணியளவில் மீண்டும் வேறு ஒரு இராணுவ அணி அப்பகுதிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் ஜீப் வாகனம் ஒன்று அங்கே வந்ததைத் தொடர்ந்து பின்னிரவு ஒரு மணியளவில் துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள் கேட்டன. அதனைத் தொடர்ந்து அவலக்குரல்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இராணுவ அச்சம் காரணமாக வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த மக்கள் காலை வேளையில் தமது உறவுகளைத் தேட ஆரம்பித்தனர். அப்போது ஆலயத்தின் தேர்முட்டி சுவர்ப்பகுதியிலும் வீதி ஓரங்களிலும் மண்ணால் மறைக்கப்பட்ட இரத்தத் தடயங்கள் காணப்பட்டன. பின்னர் இவர்களது உயிரற்ற உடல்கள் வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் இடையிலுள்ள கப்பூது கண்டல் காட்டுப்பகுதியில் இருப்பதாகக் கூறப்பட்ட போதும் பின்னர் அப்பகுதியில் சடலங்கள் எதுவும் இல்லை என கண்காணிப்புக் குழுவினர் தகவல் தெரிவித்தனர். இப்பகுதிக்கு மக்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காணமற்போன எட்டுப் பேரும் இலங்கை அரசபடைகளினாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என அப்பகுதிமக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, சாவகச்சேரி பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்