உதயன் பணிமனைப் படுகொலை – 02 மே 2006


ஊடகங்கள் ஓரு நாட்டிற்கும் சமூகத்திற்கும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றன. இவ் ஊடகங்கள் சுதந்திரமான முறையில் செயற்படும் போதே அவற்றால் சிறப்பாகவும் நடு நிலைமைத் தன்மையாகவும் செயற்படமுடியும். இலங்கையின் ஊடகங்களின் சுதந்திரம் பல வருடங்களாகப் பறிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை நிறுவனம் மீதான தாக்குதலும் ஊடக சுதந்திரத்திற்கு சாவு மணியடிக்கும் சம்பவமாகவே அமைகின்றது

.02-05-2006 அன்று மாலை உதயன் பணிமனை தனது வழமையான பணிகளுடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பத்திரிகைக்கான தயார்ப்படுத்தலில் பணியாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இவ்வேளையில் இரவு 7.30 மணியளவில் உதயன் பணி மனையினுள் புகுந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினரும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த பணியாளர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதில் இரண்டு பணியாளர் உயிரிழந்தனர் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மேலும் அங்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன. இத்தாக்குதலானது தமிழ் ஊடகத்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதுடன் மிகவும் காட்டு மிராண்டித்தனமானது என இலங்கை பத்திரிகையாளர் சங்கம், இலங்கை  ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடகத்துறை அமைப்புக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.