முள்ளியவளைப் படுகொலை – 16.01.1985


முள்ளியவளைக் கிராமம் முல்லை, மருதநிலங்கள் சூழ்ந்த வளங்கொழிக்கும் பிரதேசமாகவும் பாரம்பரிய கலை, பண்பாடு என்பன சிறப்பாகவுள்ள பிரதேசமாகவும் வவுனியா – முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முல்லைத்தீவில் நிலைகொண்டிருந்த அரச படைகள் 16.01.1985 அன்று தைத்திருநாளின் மறுதினமான கால்நடைகளுக்கு மக்கள் நன்றி செலுத்துகின்ற (மாட்டுப் பொங்கல்) தினத்தன்று அதிகாலை 4.00 மணியளவில் முள்ளியவளைக் கிராமத்தைச் சுற்றிவளைத்தன.

முள்ளியவளைப் பிரதேச மக்கள் வழமைபோலவே அதிகாலைப் பொழுதில் தமது காலைக்கடன்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தான் தமது பிரதேசம் இராணுவத்தின் சுற்றிவளைப்பிற்கு உட்பட்டிருப்பதை உணர்ந்தார்கள். சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் முள்ளியவளைப் பிரதேசத்தில் ஊடுருவி அங்கிருந்து ஏழு மாதக் கர்ப்பிணிப் பெண் மூன்று பிள்ளைகளின் தாயார் ஆகிய இரண்டு பெண்கள் உட்பட பதினேழு பேரைக் கைது செய்ததுடன, இவர்களின் வாழ்விடங்கள் பலவற்றையும் தீக்கிரையாக்கிச் சென்றனர். சிறிது நேரத்தில் (அரை மணி) சரமாரியான சூட்டுச் சத்தங்கள் கேட்டதை உறவினர்கள் அவதானித்தனர். சிறிது நேரத்தில் (அரை மணி) சரமாரியான சூட்டுச் சத்தங்கள் கேட்டதை உறவினர்கள் அவதானித்தனர். பிடித்துச் செல்லப்பட்டவர்களின் உறாவினர்கள்  தவிர்நத் ஏனையோருக்கு பதினேழு பேரும் உயிரிழந்து விட்டார்கள் எனும் செய்தி பரவத்தொடங்கியது.

சிறிது நேரத்தில் இராணுவ வாகனங்கள் முல்லைத்தீவை நோக்கி நகர்ந்தன. உறவினர்கள் தமது உறவுகளை ஒவ்வொரு வாகனங்களாகப்  பார்த்துக்கொண்டிருந்தனர். ஒரு வாகனத்தில் மட்டும் சைக்கிள்கள், பொருட்கள் ஏற்றப்பட்டு இராணுவத்தினர் சென்றதைக் கண்ட உறவினரால் அதற்குள் உயிரிழந்தவர்கள் உடலங்கள் இருப்பதை அறியமுடியாமற் போனது.

அன்றையபொழுது மறைந்து மறுநாளும் தமது உறவினர்கள் வீடு திரும்பாத நிலையில் ஊரிலிருநத் சமாதான நீதவான் திரு.தியாகராசா என்பவருடன் முல்லைத்தீவு இராணுவ முகாமிற்குச் சென்றிருந்த போது அங்கு இறந்தவர்களின் உடல்கள் வீசப்பட்டிருந்தன. அங்கே வீசப்பட்டிருந்த உடல்கள், உடைகள் அற்றும், கைகள், கால்கள், தலைகள் என்பன துண்டிக்கப்பட்டும், உடல்களில் காயங்கள் பல ஏற்படுத்திக் கொலை செய்யப்பட்டும் இருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. அவற்றுள் கொலை செய்யப்பட்டிருந்த கர்ப்பணிப் பெண்ணின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தை சுமந்த வயிற்றுப் பகுதி எரிக்கப்பட்டு சிசு பரிதாபமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததையும் காணமுடிந்தது.

மற்றைய பெண்ணின் உடல் சிகரட் சூட்டுக்காயங்களுடன், அடையாளம் தெரியாத வகையில் துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்ததையும் கண்ணுற்று அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். உறவினர்கள் அவ் உடல்களை இராணுவத்தினரிடமிருந்து தமக்கு தருமாறு கேட்ட வேளை கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகளென கையொப்பமிட்டுத் தந்தால் மட்டுமே உடல்களை தருவோம் எனக்கூறி இராணுவம் மிரட்டியபோது மக்கள் அதனை ஏற்க மறுத்தனர். இதனால் இராணுவத்தினர் உடல்களை மக்களிடம் ஒப்படைக்காது தாமே அவ் உடல்களுக்குத் தீயிட்டனர்.

இச்சம்பவத்தில் தனது கணவரையிழந்த தவரத்தினம் திலகவதி சம்பவம் பற்றிக் கூறியதாவது:

“அதிகாலை 4.30 மணியளவில் வீடுகளுக்கு வந்த இராணுவத்தினர் சில பெண்களோடு எனது கணவர், மகன் உட்பட பதினேழு பேரைக் கைது செய்ததுடன், சிலரது வீடுகளை எரித்து சொத்துக்களையும் சூறையாடினர். பின் கைது செய்தவர்களை அருகிலிருந்த காடு நோக்கிக் கொண்டு சென்றனர். பின் பல சூட்டுச் சத்தங்கள் கேட்டது. அதன்பின் இராணுவத்தினரின் வாகனங்கள் முல்லைத்தீவு நோக்கிச் சென்றன. அதில் கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் படுகாயமடைந்தவர்களின் உடல்களையும் அதன்மேல் சைக்கிள்கள் மற்றும் பொருட்களையும் ஏற்றி எடுத்துச் சென்றனர்.

அடுத்தநாள் சமாதான நீதவானுடன் முல்லைத்தீவு சென்று பார்த்தபோது எல்லோரும் படுகொலை செய்யப்பட்டு உடலில் ஒரு துணி இல்லாத சடலங்களாகக் கிடந்தது. அவர்களது உடலை எடுத்துச் செல்லக்கேட்டபோது அவர்களைக் கொட்டி (புலிகள்) என்று கையெழுத்திட்டாலே கொண்டு போகமுடியும் என்றனர். அவர்கள் எல்லோரும் பொதுமக்கள் தவறாக கையெழுத்திட்டு உடல்களை பெற விரும்பாததால், அங்கு விட்டுவிட்டு வந்தோம்.”

16.01.1985 அன்று முள்ளியவளைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. நாகரெட்ணம் ஸ்ரீஸ்கந்தராசா
  2. குமாரசாமி விஜயகுமாரி (வீட்டுப்பணி)
  3. பிலிப்பையா அன்ரன்யோகராசா (வயது 17 – கடற்தொழில்)
  4. தம்பையா விவேகானந்தம் (மாணவன்)
  5. மார்க்கண்டு தெட்சணாமூர்த்தி (வயது 19 – கடற்தொழில்)
  6. செல்லத்துரை நவரட்ணம் (விவசாயம்)
  7. செல்லத்துரை குமாரசாமி (விவசாயம்)
  8. சுப்பன் சின்னன்
  9. சின்னன் அன்னலட்சுமி (வீட்டுப்பணி)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.