மறைமுகக் கரும்புலிகள்


மறைமுகக் கரும்புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியைச் சேர்ந்தவர்கள். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் கொண்டவர்கள். தற்கொடைத்தாக்குதலை நடத்துபவர்கள் கரும்புலிகள் என்ற பெயரால் அழைக்கப்படுவர். வீரச்சாவடையும் கரும்புலிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். நினைவுநாட்களில் அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும், கெளரவமும் வழங்கப்பட்டு கல்லறையிலோ, நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். இவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வராது. கல்லறைகளோ, நினைவுக்கற்களோ இவர்களுக்காக இருக்காது. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறமாட்டாது. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள் இவர்கள். இவர்களே ‘மறைமுகக் கரும்புலிகள்’.

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை – சில

வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை – கரும்

புலிகளின் கல்லறை வெளியில் இல்லை. புதுவை இரத்தினதுரை